ஆடவர் என்ன விலை? என்ன விலை?
மீசை உள்ளவர் வாருங்கள் எங்களிடம்
காசுக்கு நாங்கள் பேரம் பேசுபவரல்ல
காசைக் கொடுத்து ஆண்களை வாங்குபவர்
வீரம் பேசும் ஆண்களுக்கு
பேரம் பேசும் பெண்கள் நாங்கள்
சோரம் போவது நாங்கள் அல்ல
வீரம் பேசும் ஆண்கள் தான்
உடல் விற்று உலாவும் பெண்களே
உலகம் அல்ல – ஆனால்
தம்மை தாமே பேரம் பேசும்
ஆண்களும் அருமை அல்ல
வீட்டுக்குள்ளே கூடுகட்டி
கூட்டினுள் எமை அமர்த்தி
நாட்டுக்குள் ஆண்மை பேசும் ஆடவரே
உம்மை பேரம் பேசும் பெண்கள் நாங்கள்
நாளை நாம் உங்கள் வீட்டுக்கு வருவோம்
அங்கே நீங்கள் சமைந்திருங்கள்
காளை உந்தன் ஆண்மை பார்க்க
காசுப் பொதிகள் எங்கள் கையில் இருக்கு
சேலை கட்ட தெரியாவிட்டால் தேற்றிக் கொண்டு
ஆடை மாற்று
சேதி சொல்ல ஆள் வருவார் அதுவரை
காத்திருங்கள்
நான்கு பேரை கேட்டு உந்தன்
பெயரை நாங்கள் அறிந்த பின்பு
சேதி சொல்ல ஆள் வருவார்
அதுவரை நீங்கள் காத்திருங்கள்
கேடு கெட்ட ஆண்களுக்கு
கோடு போட்டு வீட்டில் வைக்க
பெற்றோர் உமக்கு எச்சரிக்கை
பொறுப்போடு கண்காணிக்க
நாளை நம்மவர் உன்வீடு வரும்போது – நீ
தீயவன் எனக் கேட்டால்
கல்யாணச் சந்தையில் உனக்கு கால் ரூபா கூட
கொடுக்க மாட்டோம்
காலம் தோறும் காத்திருந்து
கந்தலாகி மனம் உடைந்து
மானங் கெட்டு மனிதர்களிடையில்
தீய சொற்களுக்குள்ளாகி
கோலம் மாறி களையிழந்து
காளை என்னும் செருக்கிழந்து
மூளை கெட்டு முதுமை பெற்று
மரண தேவனுக்கு மாங்கல்யம் கட்டு
மரண தேவனுக்கு மாங்கல்யம் கட்டு
- நா. பகீரதன் -